பிரியமானவர்களே, தேவனுடைய நாமம் மகிமைப்படும்படியாகவும், இதை வாசிக்கிற உங்களுக்கும் பக்திவிருத்தி உண்டாகும் படியாகவும் தேவன் என்னையும், என் மனைவியையும் எவ்வாறு எங்களுடைய வாழ்க்கையில் இரட்சித்தார் என்பதை சுருக்கமாக சாட்சியாக கூற விரும்புகின்றேன்.

 

பிரியமானவர்களே, நான் இலங்கை தேசத்தில் கிழக்கு மாகாணமாகிய மட்டக்களப்பில் ஒரு அர்ப்பணிப்புள்ள இந்து குடும்ப பெற்றோருக்கு மகனாக பிறந்தேன், எனக்கு ஒரு மூத்த சகோதரனும், ஒரு இளைய சகோதரனும் இருக்கிறார்கள். எனது பெற்றோர் இந்து சமயத்தில் பக்தியும், வைராக்கியமும்  நிறைந்தவர்கள், குறிப்பாக எனது தாயார் இந்து சமய கொள்கைகளை தவறாது கடைப் பிடித்து வந்தவர். நான் மட்டக்களப்பில், 1814 ம் ஆண்டு  இங்கிலாந்தை பிறப்பிடமாகக் கொண்ட வணக்கத்துக்குரிய வில்லியம் ஆல்டினால் இலங்கையில் ஸ்தாபிக்கப்பட்ட முதலாவது மிஷனரி பாடசாலையாகிய “மெதடிஸ்த மத்திய கல்லூரியில்” பாடம் கற்றேன்.  நான் என்னுடைய வாலிப  பருவத்தில் காளி இந்து கோவிலில் என்னுடைய தாயாரோடு சேர்ந்து தொடர்ச்சியாக 5 வருடங்கள் தீ மிதித்து, இந்து சமயத்தில் பற்றுள்ளவனாகவும், வைராக்யமுள்ளவனாகவும் இருந்தேன், வாலிப பருவத்தில் தேவன் இயேசு கிறிஸ்து என்னை தேடி வந்தும், அவரை நான் ஏற்றுக் கொள்ளாது  நிராகரித்திருந்தேன்.என்னுடைய மனைவி இலங்கை தேசத்தில் கொழும்பு மாகாணத்தில் அர்ப்பணிப்புள்ள ஒரு  குடும்ப பெற்றோருக்கு மகளாகப் பிறந்தார், நாங்கள் இரண்டு பேரும் இரண்டு குடும்ப பெற்றோரின் சம்மதத்தோடு திருமணம் செய்து கொண்டோம்.திருமணம் செய்து ஓர் இரு ஆண்டுகளில் இலங்கை தேசத்திலிருந்து இங்கிலாந்து தேசத்துக்கு வந்தோம், இங்கிலாந்து தேசத்துக்கு வந்து இரண்டு நாட்களுக்குப் பிறகு, என்னுடைய மூத்த சகோதரன் நிஷாந்தின் நண்பர் போதகர்  மெல்வின் அமுதாங்கன் மற்றும் அவரது மனைவி சகோதரி கிறிஸ்டின் மூலம் தேவன் அவருடைய  தேவாலயத்திற்குச் செல்ல எங்களுக்கு ஒரு வாய்ப்பைக் கொடுத்தார். தேவனுக்கு மகிமை உண்டாவதாக, அந்த நாளில் நானும் என் மனைவியும் எடுத்த முடிவு எங்களுடைய வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாக மாறியது என்று கூறினால் அது மிகையாகாது, அதன்பிறகு, ஆண்டவர் இயேசுவுக்கு எங்களுடைய இருதயத்தை திறந்து கொடுத்து ஞாயிறு ஆராதனைகள், வேத பாடம், உபவாச கூட்டங்கள் மற்றும் பிரார்த்தனைக் கூட்டங்கள் என்று ஒவ்வொரு கூட்டங்களிலும் கலந்துகொள்ள ஆரம்பித்தோம். கர்த்தருடைய நாமம் மகிமைப் படுவதாக இப்போது நாம் தேவனின் கிருபையில் வளரத் தொடங்கியதால் ​​​எங்கள் வாழ்க்கையில் மறுமலர்ச்சியையும் ஒரு புதிய மாற்றத்தையும் காண முடிந்தது, அதன் பிறகு தேவன் எங்களுடைய வாழ்க்கையில்  அற்புதங்களைச் செய்ய ஆரம்பித்தார், அவற்றில் குறிப்பிடத்தக்கது, தேவன் என் மனைவியின் “Thiroxine“ வியாதியை எந்த மருந்து வகைகளையும் அவள் பாவிக்காமல் தேவன் தனது குணப்படுத்தும் கரத்தினால்  குணப்படுத்தினார். அல்லேலூயா !

 

2011 இல், நானும் என் மனைவியும் இயேசு கிறிஸ்துவை எங்கள் வாழ்க்கையில் ஆண்டவராகவும், இரட்சகராகவும் ஏற்றுக்கொண்டோம். தேவனுக்கு மகிமை உண்டாவதாக, அதன் பிறகு, தேவன் எங்களுக்கு இரண்டு அழகான ஆண் குழந்தைகளைக் கொடுத்து எங்களை  ஆசிர்வதித்ததோடு எங்களுடைய வாழ்க்கையில் இன்னும் அநேக அற்புதங்களைச் செய்து வருவதோடு, ஆபத்துக்காலங்களில் எங்களுக்கு அவர் அனுகூலமான துணையாகவும் இருந்து வருகிறார். அதுமாத்திரமல்ல இன்று தேவன் என்னையும்,என் குடும்பத்தையும் வல்லமையாக அவருடைய நாமம் மகிமைப்படும்படியாக பயன்படுத்தி வருகிறார், சிறு பருவத்தில் கூச்ச சுபாவமுள்ளவனாக இருந்த என்னை கர்த்தர் இன்று தமிழில் மாத்திரமல்ல, ஆங்கிலத்திலும் அவருடைய வார்த்தையை பிரசங்கிக்கிற ஒரு ஊழியக்காரனாய் பயன்படுத்தி வருகிறார், அல்லேலூயா !

 

தேவன் எங்களை பாவத்தில் வாழ்ந்து கொண்டிருந்த எங்களை இரட்சித்தத்துக்கு அடையாளமாகவும், அவருக்கு நன்றி செலுத்தும் வண்ணமாகவும் எங்களுடைய முதலாவது மகனுக்கு “Elisha “  (தேவன் என் இரட்சிப்பு, God is my salvation) என்று அர்த்தம் கொள்ளும் விதமாக பெயரிட்டத்தோடு, எங்களுடைய ஊழியத்துக்கும் “God is my  salvation ministries “ என்று பெயரிட்டிருக்கிறோம். தேவனுடைய நாமம் மகிமைப்படுவதாக.


பிரியமானவர்களே, உங்களுடைய ஜெபத்தில் என்னையும், என்னுடைய குடும்பத்தையும், எங்களுடைய ஊழியங்களையும் தாங்கும் படி மிகவும் பணிவோடு கேட்டுக்கொள்ளுகிறேன்.

 

Rating: 4.6666666666667 stars
3 votes

Add comment

Comments

There are no comments yet.