ஆண்டவர் இயேசு தன்னுடைய பிள்ளைகளை ஒரு போதும் வெட்கப்பட்டு போக விடுவதில்லை

Published on 4 February 2023 at 05:00
தேவன் என் இரட்சிப்பு ஊழியங்கள் அனுதின தியான வசனம் சங்கீதம் 71 1
Audio – 1.4 MB 124 downloads

ஆண்டவரும், இரச்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் தேவன் என் இரட்சிப்பு ஊழியங்கள் சார்பாக நான் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன்.


இன்றைய தினத்தில் தியானத்துக்காக எடுத்துக் கொள்ளப்பட்ட வேத வசனம்.


கர்த்தாவே, உம்மை நம்பியிருக்கிறேன்; நான் ஒருபோதும் வெட்கம் அடையாதபடி செய்யும் (சங் 71:1). 

பிரியமானவர்களே, இந்த 71 வது சங்கீதத்தை தாவீது பாடியிருக்கிறார். தாவீது எல்லா சூழ்நிலையிலும் தேவன் மீது விசுவாசம் வைத்து அவருடைய சித்தத்தை செய்த ஒரு தேவ மனிதர். ஆனால் அவருடைய வாழ்க்கையிலும், பாடுகள், உபத்திரவங்கள், வருத்தங்கள், துன்பங்கள், நெருக்கங்கள், இருந்தது. ஆதலால் தான் அவர் கர்த்தரை நோக்கி “கர்த்தாவே, உம்மை நம்பியிருக்கிறேன்; நான் ஒருபோதும் வெட்கம் அடையாதபடி செய்யும்” என்று விண்ணப்பம் பண்ணினார். 

பிரியமானவர்களே, இயேசு கிறிஸ்துவை ஆண்டவராக ஏற்றுக் கொண்ட அவருடைய பிள்ளைகளாகிய எங்களுடைய வாழ்க்கையிலும் பாடுகள், உபத்திரவங்கள், வருத்தங்கள், துன்பங்கள், நெருக்கங்கள் இருக்கத்தான் செய்கிறது . ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவே சொல்லியிருக்கிறார் “ உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் உண்டு, ஆனாலும் திடன்கொள்ளுங்கள்; நான் உலகத்தை ஜெயித்தேன் (யோவா 16:33) என்று. ஆனால் ஆறுதலான செய்தி என்னவென்றால், தாவீதை போல் எல்லா சூழ்நிலைகளிலும் அவரை  நம்பி, அவருடைய சித்தத்தை செய்யும் அவருடைய பிள்ளைகளை அவர் அவர்களுடைய நெருக்கமான சூழ்நிலையிலிருந்து, ஆபத்திலிருந்து விடுதலை செய்து அவர்கள் வாழ்க்கையில் வெட்கப்பட்டு போகாத வண்ணம் நடத்தி செல்லுகிறார் அல்லேலூயா !   

ஆகவே பிரியமானவர்களே, கர்த்தருடைய சமூகத்தில் நீங்கள் உங்களை ஆராய்ந்து பார்த்து, கர்த்தரை வேதனை படுத்தும் வழிகள் உங்கள் வாழ்க்கையில் இருக்குமானால், தாமதியாது இப்போதே அவரிடம் உங்களுடைய பாவங்களை அறிக்கை செய்து, உங்களுடைய பொல்லாத வழிகளை விட்டு விலகி, அவருடைய சித்தத்தை நீங்கள் உங்கள் வாழ்க்கையில் செய்யும் பட்ச்சத்தில் கர்த்தர் உங்களோடு இருந்து நீங்கள் வாழ்க்கையில் வெட்கப்பட்டு போகாத வண்ணம் உங்களை தீங்கிலிருந்து விலக்கிப் பாதுகாத்து நடத்திச் செல்ல அவர் உண்மையுள்ளவராக இருக்கின்றார். அல்லேலூயா !   

ஜெபம்

அன்பின் பரலோக தகப்பனே உம்மை துதிக்கிறேன், ஸ்தோத்தரிக்கிறேன். நீர் இந்த நாளில் எங்களோடு பேசின உமது வார்த்தைக்காக உமக்கு நன்றி செலுத்துகிறோம். தாவீதைப் போல் நாங்களும் எல்லா சூழ்நிலையிலும் உம்மையே நம்பி இருக்கிறோம், நாங்கள் வாழ்க்கையில் வெட்கப்பட்டு போகாத படி நடத்தி செல்லும் படி ஜெபிக்கிறோம். நீர் எங்களுடைய ஜெபத்தைக் கேட்டதட்க்காக உமக்கு நன்றி செலுத்தி இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் நல்ல பிதாவே ஆமென்.

 

கர்த்தரின் பணியில், தேவன் என் இரட்சிப்பு ஊழியங்கள்

info@godismysalvationministries.com

WhatsApp-ல் தேவன் என் இரட்சிப்பு ஊழியங்களின்  அனுதின தியான வசனத்தைப் பெற +447447913889 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ளவும்.

 

Rating: 5 stars
4 votes

Add comment

Comments

Dan
2 years ago

Amen